Pages

Tuesday, 30 June 2020

புல்லியார் வம்ச நடுகல்

புல்லியார் வம்ச நடுகல்:

"கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"

அகநானூற்று பாடலான இப்பாடலில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும், வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான்(அரசன்) என பொருள் கொள்ளலாம். 

புல்லியின் வாழ்க்கைமுறை:

"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" 

தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை,கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, தன்னை புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான்.கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.

இதுதவிர புல்லியியின் இனத்தை பற்றி 10 பாடல்கள் சங்கஇலக்கியமெங்கும் கிடைக்கிறது. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக்கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில் கூடகண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில் வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக்கூட்டங்களை கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது என காட்டியிருப்பார். தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் "கரந்தைபோரில்" மட்டுமே ஈடுபட்ட இவ்வினம். நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்ப்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்ககாலத்தில் எவ்வரசக்கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலை கொண்டிருந்த இவ்வினம், கிட்டத்தட்ட சங்ககாலம் தொடங்கி ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அவ்வாறே தனித்தவொரு குடியினராய் திகழ்ந்ததற்கு கீழ்க்கண்ட புல்லிநடுகல்லே சான்று. இந்த கள்வர் குலத்திலிருந்து கிளைத்த குடியாய் முத்தரையர் இனம் உருமாற்றமடைந்திருக்கூடும் என்ற ஐயத்தினை செந்தலை, மற்றும் கிள்ளுக்கோட்டை நடுகல் உணர்த்துகிறது. இரண்டாம்நந்திவர்மன் காலத்திலேதான் முத்தரையர் கல்வெட்டு அரசமரபினராய் தஞ்சைபகுதியில் கிடைக்கிறது. அதற்குமுன் தொண்டைமண்டல பகுதி நடுகல்லில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டாம் நந்திவர்மனின் கடிநகரம் இன்றைய கண்டியூரைசுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதியில் அவருக்கு ஆதரவான ஒரு குடி முத்தரையர் மட்டுமே! பன்னிரன்டு வயதில் அரியனையேறிய நந்திவர்மன் தாயாதி பிரச்சனையில் கடிநகரம் தோற்றுவித்து அங்கேகுடியேற, அவருக்கு ஆதரவாய் தொண்டைமண்டலத்திலிருந்து தஞ்சைப்பகுதிக்கு முத்தரையர் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். சித்திரமாய பல்லவராஜனும், பாண்டியனும் நந்திவர்மனை சிறைபடுத்த, திருத்தணியிலிருந்து பெரும்டையொடு உதயேந்திரன் வந்து அவர்களை வென்று நந்திவர்மனை மீட்டான். அப்போரில் முத்தரையரின் பங்கு பெரியதாய் இருந்திருக்கும். இப்போருக்கு பிறகே குவாவன் முத்தரையன் எனும் முத்தரைய மன்னனின் முதல் கல்வெட்டு பொன்விளைந்தபட்டி அருகே கிடைக்கிறது. இதன்பிறகே முத்தரையர் மரபு அரச உருவாக்கம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. அதன்பின் நிருபதுங்கன் காலம் வரை பல்லவருக்கு கீழிருந்து சிறப்பாய் ஆட்சிபுரிந்தனர். இவர்களில் சிறந்த மன்னனாய் கருதப்படும் சுவரன்மாறன் தன் கல்வெட்டுகளில் "கள்வர் கள்வன்" என கூறிக்கொள்கிறான். எனவே சங்ககாலத்தில் தன்னை "கள்வர் கோமான்" என கூறிக்கொள்ளும் புல்லி மரபு இவர்களாய் இருக்கக்கூடும் என நடனகாசிநாதன் முதலானோர் கூறுகின்றனர்.

கீழே கானும் நடுகல் கல்வெட்டு, ஆநிரைகவரும் குடியாய் இருந்த புல்லிகள் அதன்பின் காவல்காக்கும் குடியாய் மாறி நிரைமீட்டு இறந்த வெட்சிபோர் வீரனை பற்றி கூறுகிறது.

"புல்லியார் கொற்றாடை நிரை
மீட்டுப்பட்ட கல் கோனாரு"


Monday, 29 June 2020

கோழிப்போர் நடுகல்

கோழிப்போர் நடுகல்:

பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும்வாய்க் கொண்டும் கடுஞ்சேவல் – ஆய்ந்து
நிறக்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறங்கண்டும் தான்வருமே போர்க்கு

புறப்பொருள் வெண்பாமாலையில் சேவற்சண்டை குறித்து வரும்பாடல் இது. பலசண்டையில் கலந்தாலும்(ஈராஸ், மூராஸ்) விடாமல் வெறியுடன் சண்டையிடுதலை மேற்கண்டபாடல் கூறுகிறது. இதில் வரும் 'எறிந்தும்' என்பதற்கு "காலின் முள்ளை இட்டு இடித்தும்" என இப்பாடலின் உரை கூறுகிறது. சமீபகாலம் வரையிலும் சேவலின் காலிடுக்கில் கூரான சிறிய கத்திபோன்ற பொருளைகட்டி சண்டையிட வைப்பர். எத்துணை வருடமாய் இவ்வழக்கம் தொடர்கிறது என இப்பாடல் வாயிலாய் அறியலாம். இன்று நாம் ஆண்கோழியை சேவல் என்று கூறுகிறோம். அன்று சேவல், பெட்டைக்கோழிகளை போதுவாக கோழி என்றே அழைத்தனர். பெண்கோழியை "அளகு" என கூறினர். சேவற்சண்டையிடும் Jockyகளை அன்று வித்தகர் என அழைத்தனர். கோழிசண்டையின் நுட்பங்களை விளக்க "கோழிநூல்" என்ற நூல் இருந்து பிற்பாடு அழிந்துள்ளது. இந்நூலிலிருந்து பல மேற்கொள்கள் பல இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. பொதுவாக சண்டைக்கோழிக்கென்று சில இனங்கள் உண்டு. இவ்வினங்களின் குஞ்சுகளையோ அல்லது முட்டைகளையோ வாங்கி, வீட்டுக்கோழிகளிடம் அடைகாக்கவைத்து அதன்பின் 5 மாதம் வரை கோழிகளோடு பழகவிட்டு பின் தனியே பிரித்து 2 வயதுவரை பயிற்சி கொடுப்பர்.
போட்டி நடக்கும் தேதிக்கு சுமார் மூன்றுமாதம் முன்பே சேவலை தயார்படுத்துகின்றனர். சண்டைசேவலுடன் கூடவே அதே எடையுடைய சில சேவல்களையும் வாங்கி தினமும் மோதவிடுவர். அதன்பின் நீச்சல்பயிற்சி இன்னும் சில பயிற்சிகள் உண்டு. சேவலுக்கு வலுகூட்ட சோளம், பாதாம், அவித்த ஈரல் கொடுப்பதுண்டு. Tournament அறிவித்தவுடன் 21 நாள்கள் கடும்பயிற்சி சேவலுக்கு அளிக்கப்படும்.
அதன்பின் போட்டியில் கலந்துகொள்ளும் சேவலுக்கு 15 நிமிடம் சண்டை 15 நிமிட ஓய்வு என்று நேரம் ஒதுக்கப்படும். ஓய்வுநேரத்தில் அடிபட்டசேவலுக்கு முதலுதவி அளிக்கப்படும். வெதுவெதுப்பான நீரில் சேவலின் உடலின் வழிந்தோடும் ரத்தம் முதலில் கழுவப்படும். அதன்பின் கால், முகம், முள் ஆகியவற்றில் காயத்தின் தன்மை ஆராய்ந்து, இரத்தத்தை வாயால் உறிஞ்சி, ஆழமான காயங்களில் ஊசியால் தையல்போடுவர். இதற்கென பிரத்யேக நூலும் உண்டு.அதன்பின் வெதுவெதுப்பான நீரை சேவலின் வாயில் குடிக்க கொடுத்து, தொண்டையில் இறங்கியதும் அந்நீரை உமிழச்செய்வர்.அப்போது இரத்தம் கலந்த நீர்வெளிவரும். இவ்வாறு பலமுறைகொடுத்தபின். நல்லநீர் கொடுக்கப்படும். ஒருதோசைக்கல்லில் துணியை வைத்து கொஞ்சம் சூடேறியதும் அதத்துணியை வைத்து ஒத்தடம் கொடுக்கப்படும். அதன்பின் க்ளுக்கோஸ் உருண்டை கொடுப்பர். அக்காலத்தில் நாட்டுச்சக்கரையுடன் அறைத்த சுக்கு உருண்டை தரப்பட்டது. அதன்பின் சேலை கொஞ்சம் நடக்கவைத்து Warmup செய்யப்பட்டு பின் அச்சேவல் போட்டியில் கலந்துகொள்ளும்,ஒவ்வொரு வருடமும் தை முதல் சித்திரை மாதம் வரை ஐந்து மாதங்களே சேவல்சண்டை சீசன். 

சண்டைசேவல் வளர்ப்பது கலை மட்டுமின்றி அது கௌரம் சார்ந்த ஒரு நிகழ்வு, ஆகவே சிலர் வறுமையில் இருப்பினும் இச்சேவல்களை சிறப்புடன் கவனித்து வளர்க்கின்றனர். கீழே படத்தில் காணும் நடுகற்கள், இதேபோன்ற கோழிப்போரில் ஈடுபட்டு மரணமடைந்த கோழிகள். இவற்றின் உரிமையாளரான 'கோழிவித்தகர்கள்' தாம் உயிருக்குயிராய் வளர்த்த சேவலை மறக்கவியலாது கல்லெழுப்பி வணங்கினர். இந்நடுகற்கள் 1500 வருடம் பழமையானது.


Sunday, 28 June 2020

நிசீதிகை நடுகல்

நிசீதிகை நடுகல்:

சமணமதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும்!  இவ்விரதம் மேற்கொள்வோர் முதலில் தம் குருவிடம் உத்தரவு பெற்று, சரியான இடத்தினை தேர்ந்தெடுத்து, தனியாய் மக்கள் நடமாட்டம் இல்லா இடத்தை தேர்ந்தெடுத்து, அவ்விடத்தை தருப்பை புல்லால் பரப்பி, அதன்மேல் வடக்குதிசை நோக்கி விரதம் மேற்கொள்வர், முதலில் திரவஉணவு மட்டும் உட்கொள்வர், அதன்பின் தண்ணீர் மட்டுமே அருந்துவர்.  அதற்கு அடுத்த நிலையில் தண்ணீரும் அருந்தாமல் விரதம் மேற்கொள்வர். தொடக்கத்தில் புல்மேல் நடக்கலாம், அமரலாம், ஆனால் இறுதிநிலையை அடையும்போது கைகாலை அசைக்காமல் இருந்து உயிர் துறப்பர். சல்லேகனை எனும் இச்சொல் பின்னாளில் வந்தது, ஆரம்பத்தில் ஆராதனை, நிசீதி, பஞ்சநமஸ்காரம் என வழங்கப்பட்டது. தமிழிலக்கியத்தில் வரும் "வடக்கிருத்தல்" வழக்கமே சல்லேகனையாக வந்திருக்ககூடும் எனும் கருத்துமுண்டு. சங்ககால கோப்பெருஞ்சோழன் முதல் நாட்டுப்புறநாயகன் பொன்னர் வரை வடக்கிருந்து உயிர்விட்ட சான்று உண்டு.
ஐங்குறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசியில்,  நீலகேசி எனும் சமணப்பெண்மனி, குண்டலகேசி எனும் பௌத்த பெண்மனியிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியமாகும், இதில் முகமலர்ந்து சாவினை விரும்பியேற்கும் சாவினை "தற்கொலை" என குண்டலகேசி கூறுகிறது, அதனை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம்(சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது! இவ்விரதம் இருப்போர் பிறவாநிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது!

நிசீதிகை கல்:

ஈரோடு வட்டம் விஜயமங்கலம் சந்திரப்ரவர் கோவிலில் ஓர் நிசீதிகை கல் உள்ளது. இது கர்நாடக மாநிலம் சிரவணபெலகோலாவிலுள்ள 19 மீட்டர் உயரமுள்ள கோமதீஸ்வரர் எனும் பாகுபலி சிலையெழுப்பிய சாமுண்டராஜனின் தங்கை புலிஅப்பை என்பவர் நிசீதிகை நோன்பேற்று இறக்கிறார். அவருக்கெழுப்பிய நடுகல்லே இது! சமணமதத்தில் பெண்கள் உயர்வாய் மதிக்கப்பட்டதேயில்லை, பெண்களுக்கு வீடுபேறு கிடையாது! ஆண்கள் சல்லேகனை நோன்பிருந்தால், வீடுபேறு அடைவர், ஆனால் பெண்கள் சல்லேகனையிருந்து, இறந்து அதன்பின் அடுத்தபிறவியில் ஆணாய் பிறந்து அதன்பின் வீடுபேறடைவர் என சமணநூல்கள் கூறுகிறது!


Saturday, 27 June 2020

கொற்றம்பூதி - பூதி வம்ச நடுகல்:

பூதி வம்ச நடுகல்:

பதினெட்டு வேளிர்களில் ஒருவர் இருக்குவேள். வேளிர்கள் துவரை நகரிலிருந்து வந்தவர்கள் என கபிலர் கூறுகிறார். கர்நாடக மாநிலம் துவாரசமுத்திரமே என்பது அறிஞர் கருத்து. ஹொய்சாளர் கூட இருக்குவேள் மரபினரே என்றும் கூறுவர். இவர்கள் மிழலைக்கூற்றம் என்ற பகுதியை ஆண்டதாய் புறநானூறு கூறுகிறது. இவை அறந்தாங்கி, திருமயம் தாலுகா பகுதிகளாய் இன்றுள்ளது.மேலும் "இருங்கோவேண்மான் அருங்கடிபிடவூர்" எனவும் புறநானூறு கூறுகிறது. பிடவூர் என்பது இன்றைய திருச்சி மாவட்ட திருப்பட்டூர் ஆகும். ஆக ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை இவ்வேளிர்கள் ஆண்டுள்ளனர். இந்த இருக்குவேளிர்களே பிற்காலத்தைய கொடும்பாளூர் சிற்றரசர்களின் முன்னோர். இவர்களின் சிறப்புப்பெயர் பூதி என்பதாகும். இப்பெயர் கேரள மாநிலம் எடக்கல் தமிழி எழுத்துகளில் பயின்று வருகிறது! இத்தகைய பூதிவம்சத்தை சேர்ந்த வீரனொருவன் ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் இறந்துவிடுகிறான். அவனுக்கு எழுப்பிய நடுகல்லே இது.

களவு ஒழுக்கம்:

மகாபாரதத்தில் அர்ஜீனனும், சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரியும் தலைமையேற்று ஆநிரைகளை கவர்ந்து வந்துள்ளனர். தொண்டைமான் காலம் வரையிலும் இவ்வழக்கம் நடந்துள்ளது. மன்னரின் ஆணை பெற்று போர்தொடுத்து ஆநிரை களவுகொள்வது மன்னூறு தொழில் என்றும், தனிப்பட்ட முறையில் களவுகொள்வது தன்னூறு தொழில் எனவும் அழைக்கப்பட்டது. இதில் இரண்டாம் வகையே பெருவழக்காய் இருந்துள்ளது. இவ்வாரு ஆநிரை கவரும்போர் வெட்சிப்போர் ஆகும்,ஆநிரையை கவர்ந்த பின் அக்கள்வர்களை, மீட்க வரும் கரந்தையர்கள் வெல்வது ஆரமர் ஓட்டல் எனப்பட்டது. ஆநிரையை கவர்ந்தவர்கள் சாதாரணமாய் தாம் கவர்ந்த பசுக்களை விட்டுத்தரமாட்டடார்கள். போரிட்டு கரந்தை மறவர்களை கொள்வார்கள். இவர்களை கடலில் மறைந்து மண்ணுலகத்தை மீட்டெடுக்கும் பெருமாளுக்கு இணையாக நச்சினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.

இதேபோன்ற ஓர் ஆநிரை மீட்கும் கரந்தைபோரில் இருக்குவேள் வம்சத்தை சேர்ந்த "கொற்றம்பூதி" எனும் தலைவன் இறந்துபடுகிறான். அவன் இறந்த இடத்திலேயே நடுகல் எழுப்பியதை கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல் குளித்தலை வட்டம் வடசேரியில் உள்ளது. முன்னர் வனமாய் இருந்ததால் இந்நடுகல் இவ்வீரன் இறந்த இடத்திலேயே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது புறவழிச்சாலை வந்ததால்
இக்கல் அப்புறப்படுத்தப்பட்டு அருகேயுள்ள தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.






மகனுக்கு தாய் எடுத்த நடுகல்

மகனுக்கு தாய் எடுத்த நடுகல்:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி தாலுக்கா வாழைக்குறிச்சி சிவன் கோவில் ஊருணியில் இந்த சிற்பமும் கல்வெட்டும்  உள்ளது. முதல் பலகையில் உள்ள சிற்பம் முன்பக்கம் நடந்து செல்வது போல் அமைந்துள்ளது. கால்கள் உடைந்துள்ளது அதில் எழுத்துக்கள் இல்லை. இரண்டாவது பலகையில் உள்ள கல்லில் இடுப்பிற்குமேல் உடைந்துள்ளது. அதில் கல்வெட்டு பொறிப்புள்ளது. இவ்வெழுத்துக்கள் 9ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. தமிழ்பேர் அதியரைசன்அடியான் மகன் என்பவர் ஏதோ ஒரு போரில் இறந்து படுகிறார்.  இறந்த மகனுக்கு  அவன் தாயார் எழுப்பிய நடுகல்லே இது. தமிழ்பேரதியரசன் என்பவர் அப்பகுதியில் இருந்த முத்தரைய மன்னராய் கருதப்படுகிறார்! அவரது சேவகரின் மகனே இறந்துபட்ட வீரனாவார். தமிழகத்தில் கிடைத்த சிறப்பான நடுகற்களில் இதுவும் ஒன்று.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

P.c: Mirunalini Natarajan




Friday, 26 June 2020

தூங்குத்தலை நடுகற்கள்

தூங்குத்தலை நடுகற்கள்:

நம் கோவில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதை பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டது. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய்நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றினை சாமிக்கு நேர்ந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றி பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ  தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு நீண்டநாட்களாய் வழக்கில் இருந்துள்ளது. பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினை சேர்ந்த கதையாக பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது! 

 இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி! 
தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7மட்டுமே கிடைத்துள்ளது. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று  விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் ஒன்று உள்ளது. இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை,குலோத்துங்கசோழன் காலத்தில் கலியுக கண்டடி தன்மசெட்டி எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி வேலன் சீலப்புகழன் என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே.இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை குலோத்துங்கசோழ மூவரையன் எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி அம்பலக்கூத்தன் எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான்.இவை அனைத்தும் சோழர் காலமே.

மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும்  இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.

"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
உரை
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்"

காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்க காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளை கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையை தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.

தமிழகத்தில் அவ்வாறு கிடைத்த வெகுசில சிற்பங்கள் கீழே

புகைப்படங்கள் உதவி:
Vels Kumaran S
Saravanan Raja
Saravana Manian P A
A.t. Mohanதூங்குத்தலை நடுகற்கள்:

நம் கோவில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதை பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டது. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய்நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றினை சாமிக்கு நேர்ந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றி பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு நீண்டநாட்களாய் வழக்கில் இருந்துள்ளது. பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினை சேர்ந்த கதையாக பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது! 

 இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி! 
தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7மட்டுமே கிடைத்துள்ளது. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் ஒன்று உள்ளது. இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை,குலோத்துங்கசோழன் காலத்தில் கலியுக கண்டடி தன்மசெட்டி எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி வேலன் சீலப்புகழன் என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே.இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை குலோத்துங்கசோழ மூவரையன் எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி அம்பலக்கூத்தன் எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான்.இவை அனைத்தும் சோழர் காலமே.

மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும் இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.

"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
உரை
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்"

காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்க காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளை கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையை தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.

தமிழகத்தில் அவ்வாறு கிடைத்த வெகுசில சிற்பங்கள் கீழே

புகைப்படங்கள் உதவி:
Vels Kumaran S
Saravanan Raja
Saravana Manian P A
A.t. Mohan







மடம் காத்து பட்ட பிராமணர்

மடம் காத்து பட்ட பிராமணர்:

திருச்சி மாவட்டம் லால்குடி என அழைக்கப்படும் திருத்தவத்துறைக்கு அருகேயுள்ள ஊர் நன்னிமங்கலம். அன்று இவ்வூர் சென்னிவாய்க்கால் என அழைக்கப்பட்டது. சென்னி என்பது சங்ககால சோழர்களின் சிறப்புப்பெயர். கரிகாலனின் தந்தை பெயர் கூட சென்னி என்பதே. பிற்கால சோழர்காலத்தில் சென்னி என்ற பெயர் ஏனோ பயின்று வரவில்லை. சென்னி பெயரில் வாய்க்கால் அமைந்துள்ளதால் இவ்வூரின் தொன்மையை அறியலாம். இவ்வூரிலுள்ள ஓர் பழமையான சிவன்கோவிலில் இந்நடுகல் உள்ளது. இதில் சிறப்பம்சம் யாதெனில் பொதுவாய் நடுகல் போர்க்குடிகளுக்கும், வனவிலங்கிலிருந்து ஊரை காத்த வேட்டுவ, வேளான்குடிகளுக்கும் எழுப்புவர். முதன்முதலாய் பிராமணர் ஒருவருக்கு இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சந்திமுற்றதேவன் எனும் பிராமனர் கோவில் மடத்தை அழிக்க நடக்கும் முயற்சியில் சண்டையிட்டு மடத்தை மீட்கிறார், ஆனால் அவர் மடத்தை மீட்கும் போரில் அவர் இறந்து விடுகிறார். அவர் மார்பில் அம்பு பாய்ந்துள்ளவாறு நடுகல் வடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எழுப்பப்ட்ட நடுகல்லே இது. இச்சம்பவம் இரண்டாம் நந்திவர்மனின் 21 ம் ஆட்சியாண்டில் நடைபெறுகிறது. அப்போது சிறிய கல்லை எழுப்பி வணங்கியிருக்க வேண்டும். அதன்பின் தற்போதைய நடுகல் சோழர் ஆட்சியில் 10 ம் நூற்றாண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது தெரிகிறது.
இந்டுகல் இன்றும் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறது.

துரோகமும் நம்பிக்கையும்

துரோகமும் நம்பிக்கையும்:

இந்த நடுகல் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்தது. இக்காலகட்டத்தில் தமிழகம் ஓர் குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. பல்லவரின் மேலான்மையிலிருந்து விலகி தனியாட்சி அமைக்க சோழர்கள் போராடி கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தனியே பாதி தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர். இந்நடுகல் கிடைத்த தகடூர் நாடு(தர்மபுரி பகுதி) அன்றைய தமிழகத்தின் எல்லைப்பகுதியாய் இருந்தது. ஆகவே பிற நாட்டினர் இப்பகுதியை அடிக்கடி தாக்குவதுண்டு. எனவே இவர்களுக்கு பெரும்பாலும் போரிட்டு தம் குடிகளை காப்பதிலேயே பொழுது கழிந்திருக்கும். இந்நடுகல் மதிகோன்பாளையம் எனும் ஊரில் கிடைத்தது. தற்போது தர்மபுரி அகழ்வைப்பகத்தில் உள்ளது. நடுகல்லில் கிடைத்த சிறு இடைவெளியில் மிகவும் சுருக்கமாகவும், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் கல்லில் செதுக்கியுள்ளனர். துரோகமும், விஸ்வாசமும் நிறைந்த கதை இது.

வாணர் குலத்தை சேர்ந்த அரிமிதையவாணராயன் எனும் அரசன் தகடூரைச்சுற்றியுள்ள கங்கநாடு, புறமலைநாடு, தாயனூர்நாடு, கோயினூர்நாடு எனும் பகுதிகளை ஆண்டு, அப்பகுதியில் ஒரு அதிகாரம் செலுத்தக்கூடிய மன்னராய் விளங்கினார். மற்றொரு எல்லைப்பகுதியை ஆண்ட நுளம்பர்குல மன்னர் ஒருவன், இவரது உறவினராய் இருக்கக்கூடும். அந்த நுளம்பன் இவரை உறவினர்போல் வஞ்சித்து துரோகமிழைத்து கொன்றுவிட்டு அவரது நாட்டையும் அபகரித்து விடுகிறார். அச்சமயம் அரிமிதையனின் மனைவி கர்ப்பமாய் வேறு இருந்திருக்கிறார். அரிமிதையரின் நம்பிக்கைக்குரிய சங்கரக்குட்டியார் என்பவர், தன் மன்னனின் மனைவியை காப்பாற்றி அவர் ஆண்பிள்ளை பெறும்வரை காவல்காத்து நின்றார். அதன்பின் மீண்டும் படையினை திரட்டி அந்த நுளம்பனை போரில் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றுகிறார். அப்போரில் பெருவீரம் காட்டிய நாகந்தை சிறுகுட்டி என்பவர் மார்பில் அம்புதரித்து இறக்கிறார். அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.

பேட்டை பராக்க்க்!!!!!

முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...