வஞ்சிவேள் நடுகல்:
சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரை கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகிறது. கருவூர் என்றும் வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு நிறைய சான்றுள்ளது. கருவூரும்-வஞ்சியும் ஒன்றே என்பதனை சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு போன்ற சங்கஇலக்கிய பாடல்கள் வாயிவாய் அறியலாம்.
"தன்பொருநை புனல்பாயும்
விண் பொரு புகழ் விறல்வஞ்சி"
இன்று அமராவதி என அழைக்கப்படும் தன்பொருநை ஆற்றங்கரையிலுள்ள வஞ்சியை தலைநகராய் கொண்டு "பெருங்கடுங்கோ" எனும் சேரன் ஆண்டதை புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. கல்வெட்டுரீதியாய் கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள வேலாயுதம்பாளையம் ஆறுநாட்டார்மலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழி கல்வெட்டு "கருஊர்" என பயின்று வருகிறது. "வஞ்சி" என்னும் பெயருக்கு சான்றாய் கி.பி.8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தகீழ்க்கண்ட இரு நடுகற்களில் ஒன்றில் "வஞ்சிவேள்" என சான்றளிக்கிறது.இரு நடுகற்களும் ஒரே அமைப்பில் உள்ளது. ஒரு நடுகல்கல்வெட்டு "கருவூர்" என்றும் மற்றொரு நடுகல் கரூரின் மற்றொருபெயராய் "வஞ்சி" எனும் பெயர் 8 ம் நூற்றாண்டு வரையிலும் இருந்ததற்கு சான்றாய் அமைகிறது,
வஞ்சிவேள்:
சங்ககாலத்திற்கு பின் வலுகுன்றிய மூவேந்தர்களில் இப்பகுதியை ஆண்ட சேரர்கள், குடிபெயர்ந்து மேற்குகடற்கரை பகுதியான கொடுங்கோளூர் பகுதியில் தம் ஆட்சியை அமைத்துக்கொண்டனர். அதன்பின்னர் புகழ்ச்சோழர் கருவூரை மையமாய் கொண்டு ஆண்டதை பெரியபுராணம் கூறுகிறது. அதன்பின் பாண்டியக்கோவை எனும் பழமையான நூல் வாயிலாய் அரிகேசி பாண்டியன் அதியமான் ஒருவனை புகழியூரில் வென்றதாய் அறிய முடிகிறது. இந்நிகழ்விற்கு பின் இப்பகுதியில் வேளிர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றதும், அக்காலம் வரையிலும் "வஞ்சி" எனும் தொன்மப்பெயர் வழங்கிவந்தமைக்கும் கரூரில் கிடைத்த இரு நடுகற்கள் சான்றளிக்கிறது.
மக்கள் இவ்விரு நடுகற்களையும் "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.
முதல் நடுகல்:
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தள்ளி "மாவடியான் ராமசாமி" எனும் கோவிலின் வளாகத்தில் மேடையமைத்து வணங்கப்படும் நிலையில் உள்ளார், மக்கள் இவரை "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.
கல்வெட்டு வாசகம்:
"(ர)விகோ கலிய மகந் கருவூரிடை ஆதந்நிரை கொளவெறிந்து பட்டான்"
இக்கல்வெட்டு ஆநிரை கவரும் "வெட்சிப்போரில்" இறந்த கோகலியன் என்பவரின் மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட நடுகல்லாகும். இப்போர் கருவூர்பகுதியில் நடந்ததாய் கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல்லில் பெரிய உருவில் காட்டப்பட்டுள்ளவனே இந்நடுகல்லின் நாயகன் இவர் கீழே ஒருவனின் காலை வெட்டி அவனை மிதித்தவாறும், தலைமேல் வாளினை ஓங்கிபிடித்து வெட்டவரும் நிலையினில் காட்டப்பட்டுள்ளார். மற்றொரு வீரன் இவ்வீரனின் வயிற்றில் வாளை இறக்கியவாரு காட்டியுள்ளனர். கடுமையான பூசல் இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.
இரண்டாம் நடுகல்:
மேற்கண்ட முதல் கல்வெட்டின் அமைப்பிலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது. ஒரு சிறு மாற்றமாய் இரண்டு வீரர்கள், இந்நடுகல்லின் கதாநாயகனை கண்டு அபயமுறும் நிலையில் காட்டியுள்ளனர். இக்கல்வெட்டும் கரூர் பேருந்துநிலையம் அருகே வ.உ.சி நகர் அருகே அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கல்வெட்டு வாசகம்:
"ஸ்ரீ வஞ்சி வேளடியான் நாகன் மகன்"
என்றுள்ளது. இதற்கடுத்த வரிகள் மிகவும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு வாயிலாக கரூர் பகுதியில் வஞ்சிவேள் என்று ஒருவர் ஆண்டதையும், அவரின் அடியானின் மகன் நாகன் என்பவர் பூசலில் இறந்ததையும் அறிய முடிகிறது.
இதன்பின்னர் 12 ம் நூற்றாண்டு நெடூர் பெருமாள் கோவிலில் "ஸ்ரீ வஞ்சி வைஷ்ணவரோம்" என்ற கல்வெட்டு கிடைக்கிறது.இதன்பின்னர் வஞ்சி எனும் பெயர் வழக்கத்திலிருந்து அழிந்துள்ளது. மாறாக முடிவழங்குசோழபுரம் என அழைக்கப்பட்டு அதன் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து கருவூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.



No comments:
Post a Comment