பெண்மானம் காத்த நடுகல்:
கூத்தராற்றுப்படையில், வேள் நன்னனிடம் பரிசுபெற்ற ஒருகூத்தன், மற்றொரு கூத்தனுக்கு வழிகூறுகையில், வழியெங்கும் மாமரந்தோறும் நடுகல் இருக்கும், அதனை அடையாளம் கண்டு வா என கூறுவதாய் விளிக்கிறது. அப்பகுதிதான் இன்றைய செங்கம், சங்ககாலத்திலேயே இங்கு நடுகல் நிரம்பியிருந்ததை இதன் வழியாய் அறியலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் முயற்சிச்சால் மீண்டும் நிமிர்த்தி வைக்கப்பட்டு, இறந்த அவ்வீரனுக்கு மீண்டும் மரியாதை செய்யப்பட்டது.
நடுகல் அமைப்பு:
வீரனின் உருவம் இடதுபுறம் பார்த்தவாறு கையில் வாள், கேடயத்துடன் காட்டப்பட்டுள்ளார். வீரனின் தலைக்குமேல் இருசிறிய உருவங்கள் காட்டப்பட்டுள்ளது! இறந்த வீரன் மேலுலகம் செல்வதுபோல் இது காட்டப்பட்டுள்ளது, இறந்தவன் வீரன்எனில் அவன் மேலுலகம் செல்வான் என்பது பழமையான நம்பிக்கை.வீரனின் காலுக்கருகே குத்துவிளக்கும், கெண்டியும் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்க்கு நீர் மற்றும் வைத்து விளக்கேற்றி வைக்கும் வழிபாடு இன்றும் தொடர்வதை நாம் இதனோடு ஒப்பீடு செய்யலாம். நடுகல்லின் கீழ்ப்பகுதி நன்றாய் செதுக்கப்பட்டு பூமிப்பகுதியில் நடும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
நடுகல் விழா:
இப்பகுதி மக்கள் வேடியப்பனாய் வழிபடும் நடுகல்லிற்கு ஆடிப்பெருக்கன்று விழா எடுப்பதை வழக்கமாய் வைத்துள்ளனர். இப்பகுதி நடுகல் பூசாரிக்கு "உளர் பூசாரி" எனப்பெயர். சுருட்டு, மது, கத்தி போன்றவற்றை வேடியப்பனுக்கு படைப்பர். உடுக்கை அடித்து உளர்பூசாரி கீழ்க்கண்டவாறு பாடுவார்,
"காட்டை வளைச்சு வில்லாப் பூட்டி
கானாய் கோபவிடும் செந்தலை வேடுவா
கோ கோ குமரா கொலுவுக்கு அலங்காரா
நீதிவாகனா! நித்திய அவதாரா!
நாராயணா! நரசிம்ம அவதாரா!
அரிக்கும் சிவனுக்கும் உற்பத்தியாய் பிறந்த
அரிமால் புத்திரா! ஐயனாரப்பா!
வேட்டுவலைவா! வேடியப்பா
என பாட்டுப்பாடி வணங்குர், அச்சமயம் மண்ணால் செய்த சிலையை வைத்து வணங்குவர், நேர்த்திக்கடனுக்காய் ஆடு, மாடுகளை வழங்குவர். அந்த ஆநிரைகளை பட்டியில் அடைக்காமல் சுதந்திரமாய் விட்டுவிடுவர்.
கல்வெட்டு சிறப்புகள்:
ராஜராஜனின் 14ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இந்நடுகல், "சாலைய் கலமறுத்து அங்குள்ள மலைஆளர் தலையறுத்து" எனும் ஒரு வாக்கியம் அவரது மெய்கீர்த்தியில் இல்லாத தகவலை கூறுகிறது. எனவே இறந்துபோன இவ்வூரன் ராஜராஜனின் கன்னிப்போரான, காந்தளூர்சாலைபோரில் கலந்து கொண்டு "அங்குள்ள மலையாளர்" தலைகொய்த வீரர்களில் இவனும் இருந்திருக்கக்கூடும் என ஒரு கருத்தும் உள்ளது. ஆகவே உரிமையுடன் இவ்வூரார் மட்டும் ராஜராஜனின் மெய்கீர்த்தியில் இந்த "மலைஆளர் தலைஅறுத்து" எனும் வார்த்தையை சேர்த்திருக்கக்கூடும், இதேபோல் குமரிமாவட்ட மணவாளகுறிச்சி பகுதி ராஜராஜனின் மெய்கீர்த்தியில் "கோவில் பள்ளியகம் கொணர்ந்து" எனும் ஒரு வார்த்தை புதிதாக அங்குமட்டுமே கிடைப்பது, இந்த வாதத்திற்கு வலுசேர்க்கிறது. மேலும் இந்நடுகல்லில்,
"கவரை மாயிலெட்டி கம்பன் பெண்டுகள் கூரைகொள்ள எறிஞ்சி பட்டான்"
மாயிலெட்டி என்பதற்கு அந்தப்புர பெண்களிற்கு வழங்கப்படும் உயரிய சொல் என அகராதிகள் கூறுகிறது. இந்நடுகல்லில் கவரை என்பதற்கு முன்னுள்ள சொற்கள் சிதைந்துள்ளதால் சரியாய் விளக்கம் கொள்ள இயலவில்லை,
கூரைகொள்ள என்பதிலிருந்து, அந்தப்புர பெண்களின் வீடுகளிலுள்ள கூரைபிரித்து எவரோ தவறாய் நடக்க முயற்சிக்க அந்த கலகத்தில் இவ்வீரன் இறந்துள்ளான் என ஒருவாறு யூகிக்க முடிகிறது.

