Pages

Monday, 7 September 2020

வஞ்சிவேள் நடுகல்

 வஞ்சிவேள் நடுகல்:

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரை கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகிறது. கருவூர் என்றும் வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு நிறைய சான்றுள்ளது. கருவூரும்-வஞ்சியும் ஒன்றே என்பதனை சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு போன்ற சங்கஇலக்கிய பாடல்கள் வாயிவாய் அறியலாம்.

"தன்பொருநை புனல்பாயும்

விண் பொரு புகழ் விறல்வஞ்சி"

இன்று அமராவதி என அழைக்கப்படும் தன்பொருநை ஆற்றங்கரையிலுள்ள வஞ்சியை தலைநகராய் கொண்டு "பெருங்கடுங்கோ" எனும் சேரன் ஆண்டதை புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. கல்வெட்டுரீதியாய் கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள வேலாயுதம்பாளையம் ஆறுநாட்டார்மலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழி கல்வெட்டு "கருஊர்" என பயின்று வருகிறது. "வஞ்சி" என்னும் பெயருக்கு சான்றாய் கி.பி.8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தகீழ்க்கண்ட இரு நடுகற்களில் ஒன்றில் "வஞ்சிவேள்" என சான்றளிக்கிறது.இரு நடுகற்களும் ஒரே அமைப்பில் உள்ளது. ஒரு நடுகல்கல்வெட்டு "கருவூர்" என்றும் மற்றொரு நடுகல் கரூரின் மற்றொருபெயராய் "வஞ்சி" எனும் பெயர் 8 ம் நூற்றாண்டு வரையிலும் இருந்ததற்கு சான்றாய் அமைகிறது,

வஞ்சிவேள்:

சங்ககாலத்திற்கு பின் வலுகுன்றிய மூவேந்தர்களில் இப்பகுதியை ஆண்ட சேரர்கள், குடிபெயர்ந்து மேற்குகடற்கரை பகுதியான கொடுங்கோளூர் பகுதியில் தம் ஆட்சியை அமைத்துக்கொண்டனர். அதன்பின்னர் புகழ்ச்சோழர் கருவூரை மையமாய் கொண்டு ஆண்டதை பெரியபுராணம் கூறுகிறது. அதன்பின் பாண்டியக்கோவை எனும் பழமையான நூல் வாயிலாய் அரிகேசி பாண்டியன் அதியமான் ஒருவனை புகழியூரில் வென்றதாய் அறிய முடிகிறது. இந்நிகழ்விற்கு பின் இப்பகுதியில் வேளிர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றதும், அக்காலம் வரையிலும் "வஞ்சி" எனும் தொன்மப்பெயர் வழங்கிவந்தமைக்கும் கரூரில் கிடைத்த இரு நடுகற்கள் சான்றளிக்கிறது.

 மக்கள் இவ்விரு நடுகற்களையும் "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.

முதல் நடுகல்:

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தள்ளி "மாவடியான் ராமசாமி" எனும் கோவிலின் வளாகத்தில் மேடையமைத்து வணங்கப்படும் நிலையில் உள்ளார், மக்கள் இவரை "கொங்கு வேட்டயர்" என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.

கல்வெட்டு வாசகம்:

"(ர)விகோ கலிய மகந் கருவூரிடை ஆதந்நிரை கொளவெறிந்து பட்டான்"


இக்கல்வெட்டு ஆநிரை கவரும் "வெட்சிப்போரில்" இறந்த கோகலியன் என்பவரின் மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட நடுகல்லாகும். இப்போர் கருவூர்பகுதியில் நடந்ததாய் கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல்லில் பெரிய உருவில் காட்டப்பட்டுள்ளவனே இந்நடுகல்லின் நாயகன் இவர் கீழே ஒருவனின் காலை வெட்டி அவனை மிதித்தவாறும், தலைமேல் வாளினை ஓங்கிபிடித்து வெட்டவரும் நிலையினில் காட்டப்பட்டுள்ளார். மற்றொரு வீரன் இவ்வீரனின் வயிற்றில் வாளை இறக்கியவாரு காட்டியுள்ளனர். கடுமையான பூசல் இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.

இரண்டாம் நடுகல்:

மேற்கண்ட முதல் கல்வெட்டின் அமைப்பிலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது. ஒரு சிறு மாற்றமாய் இரண்டு வீரர்கள், இந்நடுகல்லின் கதாநாயகனை கண்டு அபயமுறும் நிலையில் காட்டியுள்ளனர். இக்கல்வெட்டும் கரூர் பேருந்துநிலையம் அருகே வ.உ.சி நகர் அருகே அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 


கல்வெட்டு வாசகம்:


"ஸ்ரீ வஞ்சி வேளடியான் நாகன் மகன்" 


என்றுள்ளது. இதற்கடுத்த வரிகள் மிகவும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு வாயிலாக கரூர் பகுதியில் வஞ்சிவேள் என்று ஒருவர் ஆண்டதையும், அவரின் அடியானின் மகன் நாகன் என்பவர் பூசலில் இறந்ததையும் அறிய முடிகிறது. 


இதன்பின்னர் 12 ம் நூற்றாண்டு நெடூர் பெருமாள் கோவிலில் "ஸ்ரீ வஞ்சி வைஷ்ணவரோம்" என்ற கல்வெட்டு கிடைக்கிறது.இதன்பின்னர் வஞ்சி எனும் பெயர் வழக்கத்திலிருந்து அழிந்துள்ளது. மாறாக முடிவழங்குசோழபுரம் என அழைக்கப்பட்டு அதன் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து கருவூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

புகளூர் தமிழி கல்வெட்டில்" கருஊர்" 

 இரண்டாம் நடுகல் 

முதல் நடுகல் 


Saturday, 25 July 2020

இனாம் குளத்தூர் நினைவுத்தூண்கள்

இனாம் குளத்தூர் நினைவுத்தூண்கள்:

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் முன்பு மூன்று தூண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி வட்டவடிவில் செதுக்கப்பட்டு, நந்தியுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.மூன்று தூணிலும் உருவம் ஏதும் இல்லை, முதல் தூணில் உறத்தூர் கூற்றத்து கோநாட்டு நம்பி கிழத்தியார் தலையாய நாட்டின கல் என்றுள்ளது. தலைநாழிய நாட்டின கல் என்றால் இறக்க என பொருள். முதல் தூண் ஒரு பெண்ணுக்காய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண். இரண்டாம் தூண் கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்த்து களப்பூருடையான் என்பவருக்கு எழுப்பப்பட்ட நினைவுத்தூண். மூன்றாம் தூண் உறத்தூர் கூற்றத்து வடகோநாட்டை சேர்ந்தவருக்கு எழுப்பட்டது. கி.பி10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் இவை. இன்று லைப்பகுதி மட்டுமே வெளியே தெரிகிறது. எழுத்துப்பொறிப்புகள் உள்ளே புதைந்து விட்டது.


Friday, 24 July 2020

மல்யுத்தமும் சதியும்

மல்யுத்தமும் சதியும்:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ளது பெலத்தூரு கிராமம், இராஜராஜன் காலத்திலேயே இப்பகுதி சோழர் வசமானது. கன்னட பகுதி குறுநில மன்னர்கள், சோழர்களின் மேலாண்மையை ஏற்று, அவர்களுக்காய் பலபோர்களில் கலந்து வெற்றியை பெற்று தந்தும், இறந்தும் உள்ளனர். அதேபோன்ற ஒரு குறுநில மன்னன்தான் "நவிலி" நாட்டை ஆண்ட எச்சா என்பவர், இவர் "நுக" நாட்டை ஆண்ட ரவிகா என்பவரின் மகளான தொகப்பை என்பவரை மணமுடித்தார். பெர்வய்யல் எச்சா மிகச்சிறந்த வீரர், மல்யுத்தத்திலே மிகுந்த பயிற்சியுடையவர். ஒருமுறை மல்யுத்தபோட்டியிலே அரசகுமாரன் ஒருவனை வீழ்த்திவிடுகிறார், அந்த அரசகுமாரன் எவர் என தெரியவில்லை, எந்த அரசகுலம் என்ற தகவலும் இல்லை. தவறுதலாய் அந்த அரசகுமாரன் இறந்துவிடுகிறார். உடனே அவருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டு, கொன்றும் விடுகின்றனர். இதைகேள்விபட்ட, "தொகப்பை" சுற்றத்தார் தடுத்தும் கேளாமல், சதியேற தயாராகிறார். தான் இறக்கும் முன்பு தனது உடைமைகள் அனைத்தும் தானமளித்து தன் கணவன் உடலின் மீது சதியேறி மாண்டு விடுகிறார். இந்த வீர தம்பதியர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லே இது.

"தமது தேகமதை தீயிற்களித்த தேகப்பை" என்பதே இக்கல்வெட்டின் முக்கிய வாசகம். இரண்டாம் ராஜேந்திரசோழன் கால நடுகல் இது.

புகைப்பட உதவி: John Peter sir


Tuesday, 14 July 2020

வேட்டை கருப்பர்

வேட்டை கருப்பர்:
திருச்சி மாவட்டம் இடமலைப்பட்டிபுதூர் அருகேயுள்ள இரட்டமலையில் உள்ளது இந்நடுகல்சிலை. இந்தகல்வெட்டை முதலில் கண்டறிந்தவர் காணும்போது இந்நடுகல் புதர்மண்டிய இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இரும்புகொட்டகை அமைக்கப்பட்டு இந்நடுகல் வேட்டைக்கருப்பு என அழைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். வேட்டைக்கருப்பின் வரலாற்றை பார்ப்போம்.
கல்வெட்டு தகவல்:
இந்நடுகல் இரண்டு அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்தொகுதியில் வெட்டரிவாள், மழு, அம்பு, கொடுவாள், கத்தி, குத்தீட்டி என காட்டப்பட்டுள்ளது!
கீழ்தொகுதியில் வீரன் ஒருவன் குதிரையை இழுத்து வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே பெரிதாக வெட்டரிவாள் காட்டப்பட்டுள்ளது. "பனையூர் வாழ்க்கை" எனும் இடத்தில் (இவ்வூர் பராந்தகன் கால திருச்செந்துறை கல்வெட்டிலும் வருகிறது) கன்றாப்பில் எனும் ஊரைச்சேர்ந்த, "வேட்டன் மதிரை" என்பவர் காவு(உயிர்ப்பலி) கொடுக்கிறார். அதனை காப்பாற்றுவோரின் பாதம் என் தலைமேல் என்கிறார்.என்ன காரணத்தினால் இதைசெய்தார் என குறிப்பில்லை.இதனை "காலமுக்கியங்குழு" என்ற குழுவின் ஆணைக்கிணங்க செயல்படுத்துகின்றனர். அநேகமாய் அவர்கள் பலியிட்டது குதிரையாய் இருக்கலாம். இவ்வாறு குதிரையை பலியிடும் முறை எங்கேயும் இல்லை. எனவே அரிதாய் பலியிட்டதனால் இக்குதிரைக்கு "நினைவுக்கல்" எடுப்பித்திருக்கலாம்.
அன்று குதிரையை காவு கொடுத்த 'வேட்டன் மதிரை' என்று வேட்டைக்கருப்பாக வணங்கப்படுகிறார்.இன்றும் இக்கோவிலில் நிறைய பலிகள் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் எங்கும் இல்லை.






Friday, 3 July 2020

சதி கற்கள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கணவன் இந்தவுடன் சமூகத்தில் கைம்பெண்ணிற்கு ஏற்படும் கொடுமையை எண்ணியோ அல்லது கணவனின் மேல் இருந்த காதலோ என எதன்பொருட்டோ மனைவியை உடன்கட்டை ஏறுவாள். இது அவளின் விருப்பப்படியோ அல்லது கட்டாயத்தின்படியோ நிகழும் , வேதத்திலும், இதிகாசத்திலும் "சதியேற்றம்" பற்றிய குறிப்புகள் உண்டு.

இதிகாச குறிப்புகள்:
இலங்கை வேந்தன் இராவணனின் தந்தை குஷத்வஜா மாண்டதும் அவர் மனைவி வேதவதி சதியேறினார்,( வால்மீகி ராமாயணம்) கண்ணனின் தந்தை வாசுதேவன் இறந்ததும் அவரது மனைவிகளான தேவகி, பத்ரா, ரோகினி, மதிரா ஆகியோர் சிதையில் விழுந்து மாண்டனர். கிருஷ்ணர் இறந்ததும் அவரது மனைவியரான ருக்மணி, காந்தாரி, சைபியா, ஹேமாவதி, ஜம்பாவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து மாண்டனர். கந்தபுராணத்தில் சூரபதுமன் போரில் மாண்டதும் அவன் மனைவி பதுமுகோமளை உயிர் விட்டாள்.
இன்னும் பல உதாரணம் உண்டு.

இலக்கிய குறிப்பு:

பாண்டியரின் வடஎல்லை ஒல்லையூர் நாடு. (இன்றைய புதுக்கோட்டையிலுள்ள ஒலியமங்கலம்) அதனை சோழர் கைப்பற்றுகின்றனர்.பூதப்பாண்டியன் அதனை போரிட்டு வென்றான். ஆகவே "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்" எனும் பெயரினை பெற்றான். இவன் பெயரில் இன்றும் நாஞ்சில் பகுதியில் "பூதப்பாண்டி" எனும் பெயரில் ஊர் உள்ளது. இத்தகைய சிறப்புள்ள இம்மன்னன் ஒருநாள் இறக்கிறான்.

இவனது மனைவி பெருங்கோப்பெண்டு. இவள் அரசியல் மாண்பறிந்தவள். கணவன் இறந்தவுடன் தீப்புக எண்ணுகிறாள். சுற்றத்தார் இவளை விடவில்லை. அரசன் இல்லா குறைநீங்க அரசாள வருமாறு கூற, அக்கூற்றினை ஏற்க மறுக்கிறாள். தீப்புகாவண்ணம் தடுக்கும் சான்றோரை சினத்துடன் உரைக்கிறாள். அதுவே இப்பாடல்.

"பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கென செல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச்சூழ்ச்சி பல்சான்றீரே
அணில்வரி கொடுங்காய் வாள்போழ் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
...........................
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"

பொருள்:
சான்றோரே! நீங்கள் தீப்புகாது தடுக்கின்றனர். ஒருவேளை தீப்புகுதல் அரிது என எண்ணுகிறீர்போலும். எனக்கு குளிர்ந்த தாமரைபொய்கையும், ஈமத்தீயும் ஒன்றே! 
(மேலும் இங்கு கைம்பெண்மகளிர் மேற்கொள்ளும் நோண்பினையும் கூறுகிறது! ) 
வெள்ளரிவிதைபோன்ற நல்லமணம் உடைய நெய்யினை கைம்மைமகளிர் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்.நீர்ச்சோற்றை வேளைக்கீரையுடனே உண்பர். பருக்கைககல் பரப்பப்பட்ட படுக்கையில் பாய்இன்றி உறங்குவர்.
இப்படுக்கைக்கு பிணப்படுக்கையே மேல். என கூறி தீப்புகுந்தாள். இதிகாசம் தவிர்த்து முதன்முதலாக சதியேற்றம் குறித்து வரும் தகவல் இது. மேலும் ஆய்வேளிர் அண்டிரன் இறந்ததும் அவன் மனைவி இறந்ததாய் புறநானூறு கூறுகிறது.

வரலாற்றில் சதியேற்றம்:

ராஜராஜசோழனின் தந்தை சுந்தரசோழன் இறந்ததும் அவரது மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறினார். இதனை திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திரசோழன் பிரம்மதேசத்தில் இறந்தபோது வன் மனைவிய்ருள் ஒருவரான வீரமாதேவி சதியேறி இறந்தார். மதுரை விஜயராக நாயக்கர், போரில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் தருவாயில், பகைவர் கையில் தன்மனைவியர் சிக்காமல் இருக்க அனைவரையும் தீயிலிட்டு கொன்றார். தேசிங்குராஜன் கடலியில் இறக்க, அவனது மனைவி சதியேறினார். இவளது தியாகத்தை மெச்சிய நவாப் "இராணிப்பேட்டை" என்ற ஊரையே ஏற்ப்படுத்தினார்.

சதிவழக்கம்:

மார்க்கோபோலோ தனது பயணக்கட்டுரையில் சதிவழக்கம் இந்தியா முழுவதும் அதிகம் இருந்ததென குறிப்பிடுகிறார். சதிவழக்கம் எவ்வாறு இருந்ததென போர்த்துகீசிய பயணி பெஃர்னோவா நூனிஸ் குறிப்பிடுகிறார். சாதாரண ஏழைகுடும்ப பெண்கள் சதியேற விரும்புவதில்லை, ஆனால் சிதையில் அவர்களது உறவினர் பிடித்து தள்ளிவிட்டுவிடுவர். உயர்வகுப்பு பெண்ணாயிருப்பின் சிலசடங்குககள் செய்து அவளாகவே தீயில் விழும்படி ஏற்பாடு செய்வர், மங்கல வாத்யம் முழங்க, முழு ஒப்பனை செய்து, உயர்ந்த விலையுடைய ஆடையை அணிவிப்பர். பின்னர் தெருவில் ஊர்வலமாய் அழைத்து வந்து, சொத்துகளை அப்பொழுதே அவளது பிள்ளைகளுக்கு பங்கிட்டு, அதன்பின் சுடுகாட்டுக்கு அழைத்துவந்து ஒருகுழியில் இறங்கச்செய்து ஆடைகளை உருவி, உடலெங்கும் எண்ணெய் பூசி மொழுகிய பின் உடலைமறைக்க சிறுஆடை அணிவித்து மடிவர் என மற்றொரு வெளிநாட்டு பயணியான பார்போசா தான் கண்டதை கூறுகிறார். சிலபெண்கள் விதியை நொந்து உயிரிடுவர், சிலர் மரணபயம் காரணமாய் பின்வாங்கினால் வழுக்கட்டாயமாய் இழுத்து நெருப்பில் தள்ளுவர். இச்சடங்கினை பிராமணர் ஒழுங்குபடுத்துவர்.

நாயக்கர் ஆட்சியில் ஏகப்பட்ட சதி நடுகற்கள் கிடைக்கின்றன. அதற்கு முன்னால் பல்லவர் காலம் முதல் கிடைத்தாலும் அருகியே கிடைக்கிறது.இன்றும் பல ஊர்களிலுள்ள "தீப்பாய்ந்தம்மன்" வழிபாடு உள்ளது. அவர்கள் இவ்வாறு சதியேறியவர்களே. இக்கொடிய வழக்கம் சட்டவிரோதமானது என்றும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராயின் உதவியுடன் வில்லியம் பெண்டிங் பிரபு இதற்கான சட்டத்தை வங்க மாகாணத்தில் கொண்டுவந்தார். பின்னர், 1830 ஆண்டு இச்சட்டம் சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் அமுலாகி ஒழிக்கப்பட்டது.



புலிக்குத்தி நடுகற்கள்

புலிக்குத்தி நடுகற்கள்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்தியாவில் தொன்மை வாய்ந்த நடுகற்கள்  பாறைஓவிய பதிவாய் காணப்படுவது விலங்கினங்களுடன் பூசலிட்டு இறந்த வீரனை போற்றுவதாகவே உள்ளது. ஆயிரம்பசுக்களை தானம் செய்யும் புண்ணியம் போரில் மாண்ட ஒரு வீரனுக்கு கிடைக்கும் என ரிக் வேதம் கூட கூறுகிறது. அம்பாரிஷா எனும் மன்னன் ஒருபோரில் கலந்துகொள்வான். அப்போது அவன் சேவகன் சுதேவா அவன் கண்முன்னே மாண்டுபோவான். அவன் அழகிய விமானத்தில் சொர்க்கம் செல்வான். எத்தகு வேள்வியும் செய்யாத அவன் எவ்வாறு சொர்க்கம் சென்றான்? என இந்திரன் அம்பாரிஷா கேட்க நாட்டின் பொருட்டு ஒருவன் இறந்தால் அவன் வீரசுவர்க்கம் புகுவான் என இந்திரன் பதிலளிப்பான். போர் அல்லது பூசலிற்கு ஆயிரம்காரணம் இருக்கலாம். ஆனால் தன்பொருட்டு  சண்டையிடாமல் பிறருக்காய் மாண்டவனே தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறான். இது ஒருவகையில் இவ்வகை வீரர்களை ஊக்கப்படுத்துவதாகவும், மற்றவர்களை இவ்வாறுதயார்படுத்துவதாகவும் அமைகிறது!  நிறைய நடுகற்களில் மாண்ட வீரனை கௌரவப்படுத்த யானையை விட உயர்த்திக் காட்டுவதுண்டு.அதன் காரணம் அவ்வீரன் காட்டிய பெருவீரமே. இதே மான்பு நமது தெய்வச்சிலைகளில் காணலாம். எட்டுக்கைகாளி, பத்துக்கைதெய்வம் போன்றவர்களுக்கு அவ்வாறு வடிக்க காரணம் எதுவென யோசித்தால் ஒருதெய்வம் பலவித ஆயுதத்தை ஒரே நேரத்தில் உபயோககிக்கும் திறன் கொண்டதே என தான்நம்பியதை பிறருக்கு சுட்டவே என்ற காரணம் புலப்படும். இதையே தான் நடுகல்லிலும் வடித்துள்ளனர்.சங்க இலக்கியத்தில் புலிகுத்தி வீரன் குறித்து குறிப்புள்து. கபிலர் இருக்குவேளிரை "புலிக்கடிமால்" என கூறுவது நோக்கத்தக்கது. இலக்கியம் தவிர்த்து பல்லவர்காலத்தில் நமக்கு எழுத்துப்பொறிப்புடன் நடுகல் கிடைத்துள்ளது. முத்தரைய மன்னன் சுவரன் மாறன் கூட புலியைக்குத்தி கொன்று பெருவீரனாய் தனை காட்டிக்கொள்கிறார். அப்புலிக்கு ஒருநடுகல்லையும் தான் கொன்ற இடத்தில் எழுப்புகிறான்.பெரும்பாலும் இவ்வகை நடுகற்கள் குறிஞ்சி, முல்லை பகுதிகளில் கிடைக்கிறது. முல்லைவனமாய் இருந்து பிற்காலத்தில் விவசாயநிலமாக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாய் கொங்கு பகுதிகளில் பிற்கால பாண்டியராட்சியிலிருந்து நாயக்கர் காலம் வரை நடுகல் அதிகம் கிடைக்கிறது. இதனை இன்றைய சமூக சூழலுடன் ஒப்பிடலாம். வனத்தைஒட்டிய குடியிருப்புகளில் இன்று ஆங்காங்கே சிறுத்தை, முதலிய வனவிலங்குகள் தென்படுவதைபோல அன்றும் தென்பட்டிருக்கும் அதன் சான்றே கீழ்க்காணும் நடுகற்கள்.







Tuesday, 30 June 2020

புல்லியார் வம்ச நடுகல்

புல்லியார் வம்ச நடுகல்:

"கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"

அகநானூற்று பாடலான இப்பாடலில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும், வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான்(அரசன்) என பொருள் கொள்ளலாம். 

புல்லியின் வாழ்க்கைமுறை:

"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" 

தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை,கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, தன்னை புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான்.கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.

இதுதவிர புல்லியியின் இனத்தை பற்றி 10 பாடல்கள் சங்கஇலக்கியமெங்கும் கிடைக்கிறது. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக்கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில் கூடகண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில் வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக்கூட்டங்களை கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது என காட்டியிருப்பார். தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் "கரந்தைபோரில்" மட்டுமே ஈடுபட்ட இவ்வினம். நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்ப்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்ககாலத்தில் எவ்வரசக்கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலை கொண்டிருந்த இவ்வினம், கிட்டத்தட்ட சங்ககாலம் தொடங்கி ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அவ்வாறே தனித்தவொரு குடியினராய் திகழ்ந்ததற்கு கீழ்க்கண்ட புல்லிநடுகல்லே சான்று. இந்த கள்வர் குலத்திலிருந்து கிளைத்த குடியாய் முத்தரையர் இனம் உருமாற்றமடைந்திருக்கூடும் என்ற ஐயத்தினை செந்தலை, மற்றும் கிள்ளுக்கோட்டை நடுகல் உணர்த்துகிறது. இரண்டாம்நந்திவர்மன் காலத்திலேதான் முத்தரையர் கல்வெட்டு அரசமரபினராய் தஞ்சைபகுதியில் கிடைக்கிறது. அதற்குமுன் தொண்டைமண்டல பகுதி நடுகல்லில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டாம் நந்திவர்மனின் கடிநகரம் இன்றைய கண்டியூரைசுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதியில் அவருக்கு ஆதரவான ஒரு குடி முத்தரையர் மட்டுமே! பன்னிரன்டு வயதில் அரியனையேறிய நந்திவர்மன் தாயாதி பிரச்சனையில் கடிநகரம் தோற்றுவித்து அங்கேகுடியேற, அவருக்கு ஆதரவாய் தொண்டைமண்டலத்திலிருந்து தஞ்சைப்பகுதிக்கு முத்தரையர் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். சித்திரமாய பல்லவராஜனும், பாண்டியனும் நந்திவர்மனை சிறைபடுத்த, திருத்தணியிலிருந்து பெரும்டையொடு உதயேந்திரன் வந்து அவர்களை வென்று நந்திவர்மனை மீட்டான். அப்போரில் முத்தரையரின் பங்கு பெரியதாய் இருந்திருக்கும். இப்போருக்கு பிறகே குவாவன் முத்தரையன் எனும் முத்தரைய மன்னனின் முதல் கல்வெட்டு பொன்விளைந்தபட்டி அருகே கிடைக்கிறது. இதன்பிறகே முத்தரையர் மரபு அரச உருவாக்கம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. அதன்பின் நிருபதுங்கன் காலம் வரை பல்லவருக்கு கீழிருந்து சிறப்பாய் ஆட்சிபுரிந்தனர். இவர்களில் சிறந்த மன்னனாய் கருதப்படும் சுவரன்மாறன் தன் கல்வெட்டுகளில் "கள்வர் கள்வன்" என கூறிக்கொள்கிறான். எனவே சங்ககாலத்தில் தன்னை "கள்வர் கோமான்" என கூறிக்கொள்ளும் புல்லி மரபு இவர்களாய் இருக்கக்கூடும் என நடனகாசிநாதன் முதலானோர் கூறுகின்றனர்.

கீழே கானும் நடுகல் கல்வெட்டு, ஆநிரைகவரும் குடியாய் இருந்த புல்லிகள் அதன்பின் காவல்காக்கும் குடியாய் மாறி நிரைமீட்டு இறந்த வெட்சிபோர் வீரனை பற்றி கூறுகிறது.

"புல்லியார் கொற்றாடை நிரை
மீட்டுப்பட்ட கல் கோனாரு"


முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...