பெய்யெனப் பெய்யும் மழை.
கணவன் இந்தவுடன் சமூகத்தில் கைம்பெண்ணிற்கு ஏற்படும் கொடுமையை எண்ணியோ அல்லது கணவனின் மேல் இருந்த காதலோ என எதன்பொருட்டோ மனைவியை உடன்கட்டை ஏறுவாள். இது அவளின் விருப்பப்படியோ அல்லது கட்டாயத்தின்படியோ நிகழும் , வேதத்திலும், இதிகாசத்திலும் "சதியேற்றம்" பற்றிய குறிப்புகள் உண்டு.
இதிகாச குறிப்புகள்:
இலங்கை வேந்தன் இராவணனின் தந்தை குஷத்வஜா மாண்டதும் அவர் மனைவி வேதவதி சதியேறினார்,( வால்மீகி ராமாயணம்) கண்ணனின் தந்தை வாசுதேவன் இறந்ததும் அவரது மனைவிகளான தேவகி, பத்ரா, ரோகினி, மதிரா ஆகியோர் சிதையில் விழுந்து மாண்டனர். கிருஷ்ணர் இறந்ததும் அவரது மனைவியரான ருக்மணி, காந்தாரி, சைபியா, ஹேமாவதி, ஜம்பாவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து மாண்டனர். கந்தபுராணத்தில் சூரபதுமன் போரில் மாண்டதும் அவன் மனைவி பதுமுகோமளை உயிர் விட்டாள்.
இன்னும் பல உதாரணம் உண்டு.
இலக்கிய குறிப்பு:
பாண்டியரின் வடஎல்லை ஒல்லையூர் நாடு. (இன்றைய புதுக்கோட்டையிலுள்ள ஒலியமங்கலம்) அதனை சோழர் கைப்பற்றுகின்றனர்.பூதப்பாண்டியன் அதனை போரிட்டு வென்றான். ஆகவே "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்" எனும் பெயரினை பெற்றான். இவன் பெயரில் இன்றும் நாஞ்சில் பகுதியில் "பூதப்பாண்டி" எனும் பெயரில் ஊர் உள்ளது. இத்தகைய சிறப்புள்ள இம்மன்னன் ஒருநாள் இறக்கிறான்.
இவனது மனைவி பெருங்கோப்பெண்டு. இவள் அரசியல் மாண்பறிந்தவள். கணவன் இறந்தவுடன் தீப்புக எண்ணுகிறாள். சுற்றத்தார் இவளை விடவில்லை. அரசன் இல்லா குறைநீங்க அரசாள வருமாறு கூற, அக்கூற்றினை ஏற்க மறுக்கிறாள். தீப்புகாவண்ணம் தடுக்கும் சான்றோரை சினத்துடன் உரைக்கிறாள். அதுவே இப்பாடல்.
"பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கென செல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச்சூழ்ச்சி பல்சான்றீரே
அணில்வரி கொடுங்காய் வாள்போழ் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
...........................
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"
பொருள்:
சான்றோரே! நீங்கள் தீப்புகாது தடுக்கின்றனர். ஒருவேளை தீப்புகுதல் அரிது என எண்ணுகிறீர்போலும். எனக்கு குளிர்ந்த தாமரைபொய்கையும், ஈமத்தீயும் ஒன்றே!
(மேலும் இங்கு கைம்பெண்மகளிர் மேற்கொள்ளும் நோண்பினையும் கூறுகிறது! )
வெள்ளரிவிதைபோன்ற நல்லமணம் உடைய நெய்யினை கைம்மைமகளிர் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்.நீர்ச்சோற்றை வேளைக்கீரையுடனே உண்பர். பருக்கைககல் பரப்பப்பட்ட படுக்கையில் பாய்இன்றி உறங்குவர்.
இப்படுக்கைக்கு பிணப்படுக்கையே மேல். என கூறி தீப்புகுந்தாள். இதிகாசம் தவிர்த்து முதன்முதலாக சதியேற்றம் குறித்து வரும் தகவல் இது. மேலும் ஆய்வேளிர் அண்டிரன் இறந்ததும் அவன் மனைவி இறந்ததாய் புறநானூறு கூறுகிறது.
வரலாற்றில் சதியேற்றம்:
ராஜராஜசோழனின் தந்தை சுந்தரசோழன் இறந்ததும் அவரது மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறினார். இதனை திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திரசோழன் பிரம்மதேசத்தில் இறந்தபோது வன் மனைவிய்ருள் ஒருவரான வீரமாதேவி சதியேறி இறந்தார். மதுரை விஜயராக நாயக்கர், போரில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் தருவாயில், பகைவர் கையில் தன்மனைவியர் சிக்காமல் இருக்க அனைவரையும் தீயிலிட்டு கொன்றார். தேசிங்குராஜன் கடலியில் இறக்க, அவனது மனைவி சதியேறினார். இவளது தியாகத்தை மெச்சிய நவாப் "இராணிப்பேட்டை" என்ற ஊரையே ஏற்ப்படுத்தினார்.
சதிவழக்கம்:
மார்க்கோபோலோ தனது பயணக்கட்டுரையில் சதிவழக்கம் இந்தியா முழுவதும் அதிகம் இருந்ததென குறிப்பிடுகிறார். சதிவழக்கம் எவ்வாறு இருந்ததென போர்த்துகீசிய பயணி பெஃர்னோவா நூனிஸ் குறிப்பிடுகிறார். சாதாரண ஏழைகுடும்ப பெண்கள் சதியேற விரும்புவதில்லை, ஆனால் சிதையில் அவர்களது உறவினர் பிடித்து தள்ளிவிட்டுவிடுவர். உயர்வகுப்பு பெண்ணாயிருப்பின் சிலசடங்குககள் செய்து அவளாகவே தீயில் விழும்படி ஏற்பாடு செய்வர், மங்கல வாத்யம் முழங்க, முழு ஒப்பனை செய்து, உயர்ந்த விலையுடைய ஆடையை அணிவிப்பர். பின்னர் தெருவில் ஊர்வலமாய் அழைத்து வந்து, சொத்துகளை அப்பொழுதே அவளது பிள்ளைகளுக்கு பங்கிட்டு, அதன்பின் சுடுகாட்டுக்கு அழைத்துவந்து ஒருகுழியில் இறங்கச்செய்து ஆடைகளை உருவி, உடலெங்கும் எண்ணெய் பூசி மொழுகிய பின் உடலைமறைக்க சிறுஆடை அணிவித்து மடிவர் என மற்றொரு வெளிநாட்டு பயணியான பார்போசா தான் கண்டதை கூறுகிறார். சிலபெண்கள் விதியை நொந்து உயிரிடுவர், சிலர் மரணபயம் காரணமாய் பின்வாங்கினால் வழுக்கட்டாயமாய் இழுத்து நெருப்பில் தள்ளுவர். இச்சடங்கினை பிராமணர் ஒழுங்குபடுத்துவர்.
நாயக்கர் ஆட்சியில் ஏகப்பட்ட சதி நடுகற்கள் கிடைக்கின்றன. அதற்கு முன்னால் பல்லவர் காலம் முதல் கிடைத்தாலும் அருகியே கிடைக்கிறது.இன்றும் பல ஊர்களிலுள்ள "தீப்பாய்ந்தம்மன்" வழிபாடு உள்ளது. அவர்கள் இவ்வாறு சதியேறியவர்களே. இக்கொடிய வழக்கம் சட்டவிரோதமானது என்றும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராயின் உதவியுடன் வில்லியம் பெண்டிங் பிரபு இதற்கான சட்டத்தை வங்க மாகாணத்தில் கொண்டுவந்தார். பின்னர், 1830 ஆண்டு இச்சட்டம் சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் அமுலாகி ஒழிக்கப்பட்டது.



No comments:
Post a Comment