அறம் காத்த முன்னோர்:
தன் சக்திக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட, தன்னால் அடக்கி ஆள முடியாத (அ) தனக்கு அச்சத்தை ஏற்படுத்திய இயற்கையை வழிபட்டதில் தொடங்கி படிப்படியாக இனக்குழு சமுதாயமாக வளர்ச்சியடைந்த காலத்தில் தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்காக போரிட்டு மாண்ட வீரனுக்கும் , தங்கள் இனக்குழு தலைவனுக்கும் குத்துக்கல், கற்த்திட்டை நடுகல் போன்ற நினைவுச்சின்னங்களை எடுத்து வழிபட்டதை சங்க பாடல்களின் மூலம் அறியலாம்...
சங்கப்பாடல்களில் ஈமச்சின்னங்கள் மற்றும் நடுகற்களின் வழிபாட்டு முறைகளை பல விதத்தில் விவரிக்கிறது, அத்தகைய வழிபாட்டு
முறைகளில் ஒன்றான உயிர்பலி கொடுப்பது பண்பாட்டு நீட்சியாக தமிழரின் வழிபாட்டு மரபில் இன்று வரை தொடர்கிறது.
உயிர்பலி கொடுப்பதின் மூலம் அவ்வினத்தின் வளமையும் இன விருத்தியும் மேம்படும் என நம்பப்பட்டது.
நடுகல் நட்டபின் அதற்கு உயிர்பலி கொடுத்து கள் வைத்து படைப்பர். பலியிடப்படும் விலங்கின் இரத்தம் நான்கு புறமும் இறைப்பதன் மூலம் அவ்வுயிரினம் மேலும் பெருகும், ஆட்டு ரத்தத்தினை இறைத்தால் ஆட்டு வளம் பெருகும் என நம்பினர். "கொழுப்பாவறிந்து குருதிப்பலி கொடுத்தால்" (அகம்-309) மாட்டு மந்தை பெருகும் எனவும் நம்பினர். முனைவர் திரு. பூங்குன்றன் ஐயா அவர்கள் இவற்றை வேத யாகங்களுடன் தொடர்பு படுத்தி கூறுவார்.
ஆநிரை கவர்ந்து வரச்சென்ற மழவர்கள் வெற்றியின் களிப்பில் தங்களுடைய தெய்வமான கொற்றவைக்கு கொழுத்த ஆவினை பலியிட்டு படைத்த உணவினை உண்டு மகிழ்ந்தனர் என்பதை பின்வரும் அகநானூற்று பாடல் மூலம் அறியலாம்.
"வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயிர் தழீஇ கடுங்கண் மழவர்
அம்புசேண் படுத்த வண்புலத்து உய்த்தென
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பின்
கொழுப்புஆ எறிந்து குறுகிய தூஉய்
புலவுப் புழுக்குஉண்டு வான்கண் அகலறை" (அகம்-309)
நடுகல்லை வழிபடும் போது கள்ளோடு, செம்மறி ஆட்டை பலிகொடுத்ததை மற்றோர் அகநானூற்று பாடல் குறிப்பிடுகிறது.
"நடுகற் பீலி சூட்டி துடிப்பெடுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூப்பலி கொடுக்கும்." (அகம்-35)
நடுகல்லுக்கு நீராட்டி நெய் விளக்கேற்றி உயிர் பலியிட்டு வழிபட்டதை கீழுள்ள புறநானூற்றுப் பாடல் கூறுகிறது..
"இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குதல் மாப்புகை மறுகுடன் கமழும்." (புறம்-329)
இப்பாடலில் குறிப்பிட்டுள்ளதை போலவே திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி அருகே உள்ள ஒரு நடு(நினைவு) கல்லுக்கு அப்பகுதி மக்கள் நீராட்டி, மஞ்சள் பூசி, விளக்கேற்றி, உயிர் பலியிட்டு வழிபட்டதை அருகிலிருந்து காணும் பெரும்பேறு பெற்றேன். மிக நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவர்கள் அனுமதி மற்றும் உதவியுடனே அந்த நடுகல் கல்வெட்டையும் படியெடுத்து வந்தேன்.
பராந்தக சோழன் காலத்தில் அவ்வூரில் ஏரி வெட்டியதை பற்றி குறிப்பிடுகிறது.
கல்வெட்டு தகவல்:
ஸ்வஸ்திஸ்ரீ
மதிரை கொண்ட கோப்ப
ர கேசரி வம்மகு யாண்டு இருபத்தொன்றா
வது வட்டைத்தலையொக்கல(?)
நிலாகிய பெரும்பாக்கன்னிலக்கண் செட்டி
கட்டுவித்த ஏரி (or ரேரி) தம்மம்..
உள்ளூர மக்களால் கொட்டப்பன் என அழைக்கப்படும் இவர் அம்மக்களின் நம்பிக்கையில் ஏரி பாசன கால்வாய் வெட்டும் தகராறில் இறந்துபோனவர். அங்கிருந்த 50வயது மூத்தவரின் பாட்டன் காலத்திய செவிவழிச் செய்தி இது. ஏரி வெட்டினார் என்பதற்கும் ஏரி பாசன தகராறில் இறந்தார் என்பதற்கும் 1000ஆண்டு கால இடைவெளியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. வரலாறு கதை வழியாகவே அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சாண்றாதரங்கள் தேவையில்லை....
வீரதீர செயல்கள் புரிந்து போரில் இறந்தவர்களுக்கு மட்டுமன்றி ஊர் நன்மையின் பொருட்டு உழைத்தவர்களின் நினைவாகவும் நடுகற்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் 1000 ஆண்டுகளை கடந்து இன்றும் அப்பகுதியின் மிகப்பெரிய நீராதாரமாக விளங்கும் ஏரியை வெட்டுவித்தவருக்கு எடுத்த நினைவுக் கல்லும் போற்றுதலுக்குறியதே...
எழுத்து: சிற்றிங்கூர் ராஜா
நன்றி : ஸ்ரீநிவாஸ்.

No comments:
Post a Comment